Published On:Friday, September 6, 2013
Posted by NIsha
ஜனநாய போர்வையில் சர்வாதிகார திசையில் பயணிக்கிறது அரசு.
ஜனநாய போர்வையில் சர்வாதிகார திசையில் பயணிக்கிறது அரசு
உலகின் ஊழல் நிறைந்த மோசமான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் முன்னணியில் காணப்படுவதாகத் தெரிவித்திருக்கும் மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஜனநாயகப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டு ராஜபக்ஷ அரசாங்கம் சர்வாதிகாரத்தின் பக்கம் நாட்டை இட்டுச் சென்று கொண்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் போது இலங்கை சர்வாதிகாரத்தின் பக்கமே பயணித்துக்கொண்டிருப்பதாக அறிவித்துவிட்டே சென்றிருக்கிறார் எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று (05) இராஜகிரியவில் தொழிலாளர் யூனியன் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அவர் செய்தியாளர்கள் மத்தியில் மேலும் விளக்கமளிக்கையில் தெரிவித்திருப்பதாவது, போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர் நாட்டுக்கும், மக்களுக்கும் ஒழுக்க வரம்புகளைக் கொண்ட ஜனநாயக சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கான அறிய வாய்ப்பு உருவாகியிருந்த போதிலும் ராஜபக்ஷ அரசாங்கம் அந்த சந்தர்ப்பத்தை தனது குடும்ப ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கும், சர்வாதிகாரத்தை நோக்கிப் பயணிப்பதற்குமே பயன்படுத்திக் கொண்டது. இதனை ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியாக சுட்டிக் காட்டி வந்தது. இப்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை அதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
தனது பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர் கூடுதலாக காலத்தை இலங்கை விவகாரத்திலேயே செலவிட வேண்டி வந்ததாகவும் அவர் கொழும்பில் சுட்டிக்காட்டினார். சட்டத்தின் ஆட்சி வீழ்ச்சி கண்டுள்ளது. வடக்கிலும் தெற்கிலும் மனித உரிமைகள் மீறப்பட்டு சீர்குலைந்து போயுள்ளது. முழு நாடும் இராணுவ மயமாக்கலின் பக்கம் சென்று கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் அச்சுறுத்தலுக்குள்ளாவது பற்றியும் அவர் தொட்டுக் காட்டியுள்ளார். இவ்வளவையும் சொன்ன நவநீதம்பிள்ளை முக்கியமானதொரு விடயத்தை கூறத்தவறி விட்டார். அது எமது நாடு திருட்டு சர்வாதிகார நாடாக மாறிவருவதை வெளிப்படுத்தத் தவறியமையாகும்.
இன்று எமது நாடு லிபியா, எகிப்து, இந்தோனிசியா போன்ற நாடுகளில் காணப்பட்ட திருட்டு ஆட்சிக்கு ஒத்ததாகவே மாறியுள்ளது. நாட்டில் அடிப்படை உரிமை மீறல்கள் அதன் பின்னணியிலேயே இடம் பெற்றுவருகின்றது. பிரதானமாக ஊடக நிறுவனங்களும், ஊடகவியலாளர்களும் பெரும் அச்சுறுத்தல்களுக்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். ராஜபக்ஷ ஆட்சியின் ஊழல் மோசடிகளை மறைப்பதற்காகவே ஊடகங்கள் மீது அச்சுறுத்தல்களும், தாக்குதல்களும் மேற்கொள்ளப்படுகின்றது. சண்டே லீடர் ஊடகவியலாளர் மந்தனா இஸ்மாயிலின் வீட்டுக்கு பாரிய மோசடி ஒன்று தொடர்பான தஸ்தா வேஜீகளை அழிப்பதற்கே ஆகும். இது தொடர்பான விசாரணையில் மந்தனா இஸ்மாயில் வீட்டுக்கு கொள்ளையர்களே போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அப்படியானால் பணம், தங்கத்தைத் தேடாமல் தஸ்தாவேஜீகளை ஏன் தேட வேண்டும். அந்த புத்தகங்கள், தஸ்தா வேஜீகளில் தங்கத்தைத் தேடினார்களா? எனக் கேட்கின்றோம். உலகின் மிக மோசமான ஊழல் நிறைந்த நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இடம்பிடித்துக் கொண்டுள்ளது. சொல்லும் அபிவிருத்தி கமிஷன் அடிக்கும் அபிவிருத்தியாகும். அபிவிருத்தி என்ற பெயரில் கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டத்தில் ஒவ்வொரு காங்கிரீட் கல்லுக்கும் கமிஷன் அடிக்கப்படுகிறது. பாதைகள் புதுப்பித்தல், மேம்பாலங்கள் அமைத்தல் போன்றவற்றால் மட்டுமல்ல குடிநீர் விநியோகத்திட்டத்தில் கூட கமிஷன் தான் மேலோங்கிக் காணப்படுகிறது. நீண்ட காலம் செல்வதற்கு முன்னர் இதன் பிரதிபலன்களை இந்த நாட்டு மக்கள் தான் அனுபவிக்கப் போகின்றார்கள். நாடு விரைவில் கடன் வழங்கிய நாடுகளின் காலனித்துவ நாடாக மாறலாம். அப்போது அந்த கடன்வழங்கிய நாடுகள் இலங்கையை தமதாக்கிக் கொள்ளும் நிலை உருவாகலாம் எனவும் மங்கள சமரவீர எச்சரித்தார்.
www.tamilcinema4u.in



