Published On:Thursday, September 5, 2013
Posted by NIsha
யாழ்ப்பாணத்திற்கு 50 கிலோ கிராம் ஹெரோயினை அனுப்பி வைக்க திட்டம்
கொழும்பில் அண்மையில் கைப்பற்றப்பட்ட பிரவுண் சுகர் ஹெரோயின் போதைப் பொருளில் 50 கிலோ கிராம் போதைப் பொருளை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்க ஆலோசனை வழங்கப்பட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது என பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.தற்பொழுது இலங்கையில் தப்பிச் சென்றுள்ள சர்தாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ள பாகிஸ்தான் பிரஜையான ஜமாலிடம் இதனை கூறியுள்ளதாக தெரியவருகிறது.
ஹெரோயின் போதைப் பொருளை பாதுகாப்பாக வைத்திருக்கும் நோக்கில், இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்ட 250 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருளில் 50 கிலோ கிராமை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டிருந்தது.
கொழும்பில் ஹெரோயின் போதைப் பொருள் கையிருப்பு முடிந்த பின்னர், யாழ்ப்பாணத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் போதைப் பொருளை பயன்படுத்த இவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இந்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளில் ஹெரோயின் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை ஹெரோயின் விற்பனையின் மூலம் கிடைக்கும் பணத்தை தாவூத் இப்ராஹிம் என்ற மாஃபியா குழு தலைவரின் நிறுவனத்திற்குரிய வங்கி கணக்கில் வைப்பிலிட்டு வந்துள்ளதாகவும் சந்தேக நபர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த போதைப் பொருள் கடத்தலின் பின்னணியில் பாகிஸ்தான் பாதாள உலக குழுவினர் சம்பந்தப்பட்டுள்ளதால், இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை விரிவுப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் தலைமையில் நடைபெற்றதுடன் இதில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மற்றும் சுங்க திணைக்களத்தின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


