Published On:Sunday, September 8, 2013
Posted by NIsha
அரச வங்கியொன்றில் சதம் சதமாக 80 லட்ச ரூபா கொள்ளை?
அரச வங்கியொன்றில் சதம் சதமாக 80 லட்ச ரூபா வாடிக்கையாளர் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
கடந்த ஆறு ஆண்டுகளாக வாடிக்கையாளர்களின் கணக்குகளில் வைப்புச் செய்யப்பட வேண்டிய தொகைகளின் சதக் கணக்குகள் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளது.
பதுளை பிரதேச அரச வங்கியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தும் பொறுப்பு, கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க வங்கியொன்றின் சிரேஸ்ட அதிகாரியொருவர் மிகவும் நுட்பமான முறையில் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
உள்ளக கணக்காய்வின் போது இந்த விடயம் அம்பலமாகியுள்ளது.
வாடிக்கையாளர்களின் வைப்புகளுக்கான வட்டி மற்றும் ஏனைய கொடுப்பனவுகளின் போது வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டிய தொகைகளில் ஏதேனும் சதக் கணக்குகள் இருந்தால் அவற்றை தனது கணக்கிற்கு மாற்றிக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.



